Tuesday, December 11, 2007

மூடநம்பிக்கையை மூலதனமாக்கி...

இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான்.

மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும்.

‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒரு பிராணிதானே. அது மட்டும் என்ன மனிதனுக்கு கேடுவிளைய வேண்டும் என்று விரதம் இருந்து வேள்வியா நடத்துகிறது! இந்தப் பூனைக் குறுக்கே வந்தால்…. இதற்கு ஒரு கதையே உண்டு. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் குருகுல கல்விதான் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்கள் அந்த குருகுலத்தில் தங்கியிருந்து படித்தார்கள். (கட் அடிப்போம். கலர் பார்ப்போம் கதையெல்லாம் இங்கே நடக்காது.) அப்படி ஒரு குருகுலத்தில் குரு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் வளர்த்த பூனை ஒன்று ஒருநாள் குருவுக்கும் மாணவர்களுக்கும் நடுவிலே நடந்து சென்றது. இதனால் சில நிமிடங்கள் மாணவர்களின் கவனம் குரு நடத்தும் பாடத்தில் செல்லாமல் பூனையிடம் சென்றது. இதே போல் மறுநாளும் பாடம் நடத்தும் வேளையில் பூனை குறுக்கே நடக்க மாணவர்களின் கவனம் சிதறியது.

அடுத்த நாள் அதே நேரத்தில் மாணவர்கள் ‘நீ வருவாயா…’ என்று பூனையின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தார் குரு. ‘பாளாய்ப போன பூனையால் பாடம் நடத்துவது தடைபடுகிறதே. இனிமேல் இந்தப் பூனை இப்படிக் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும். மாணவர்கள் ஒழுங்காகப் பாடத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதற்கு ஒரு முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

மறுநாளிலிருந்து பாடம் நடத்தும் வேளைகளில் ‘வாராய் நீ வாராய்’ என்று அந்தப் பூனையைப் பிடித்து கட்டிப்போட்டு விட்டார்.
இந்தப் பூனை குறுக்கே வந்த கதையைத்தான் திரியாக்கிப் பற்ற வைத்து பந்தமாக எறியவிட்டு கடைசியில் சகுனமாக்கி விட்டார்கள்.

திரைப் படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ அதே போல் மூடநம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே மணிபிளாண்ட்போல் வளர்த்து வருவதில் தனது பங்கைச் செவ்வனே செய்கிறது.

ஒரு பிரபல தொலைக்காட்சியில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலத் தொடரில் பல வாரங்களுககும் மேலாக ஒரு பச்சிளம் குழந்தையை மையப்படுத்தி ஒரு காட்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உடுக்கை அடித்து வெற்றிலையில் மை போட்டுப்பார்த்துஇ பச்சிளங் குழந்தையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்குமாம்!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!

பழைய மாயாஜாலக் கதைகளில் மனித உயிரைப் பலி கொடுத்து புதையலை எடுக்க முயற்சிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் எந்தக் கதையிலாவது எந்த மந்திரவாதியாவது புதையலை எடுத்து அதன்பின்பு ‘பொன் மகள் வந்தாள்…’ என்று மகிழ்ச்சியாகப் பாடி ஆடி பல நூறு வருடங்கள் வாழ்ந்தான் என்று படித்திருக்கிறோமா?

மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் இப்படியொரு உடுக்கை ஜோசியம் அவசியம்தானா?

‘மகாஜனங்களே! யோசித்துப் பாருங்கள். உட்கார்ந்து யோசியுங்கள். நின்று கொண்டு யோசியுங்கள். கழிவறைத் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள். அம்மா யோசியுங்க. அய்யா யோசியுங்க.’ என்று கவுண்டமணிபோல் தொண்டை எலும்பு தெறிக்க கத்தினாலாவாது இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

நான்கு தெருவுக்கு ஒரு சோதிடரும் நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் காணப்படுகிறார்கள். சிலர் தும்மல் வந்தால்கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக் கொண்டு சோதிடர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்திவிடுவார்கள். சிலர் காலையில் எழும்பும்போது மனைவி முகத்தில் விழிப்பதா? வேலைக்காரி முகத்தில் விழிப்பதா? என்று தனது ஆஸ்தான சோதிடரிம் ஆலோசனைக் கேட்டுத்தான் கண்ணை விழிக்கிறார்கள்.

கற்பூரச் சாமியார், சாம்பிராணிச் சாமியார், ஊதுவத்திச் சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள். இப்பொழுது பீர் சாமியார், பிராந்திச் சாமியார் என்று மதுரசப் பெயர்களைக் கொண்டவர்கள் காவிகட்டி நெற்றி நிறைய நீரு பூசி ‘எங்கேயும் எப்போதும்…’ என்று பாடித் திரிய ஆரம்பித்து விட்டார்கள் நம்ம பழனிச் சாமியார்போல்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பற்றித் தெரிந்து கொண்டால் மற்றவர்களும் எப்படி மக்களுக்குக் கற்பூரம் காட்டி மயக்குகிறார்;கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பார்ப்பதற்காக நம்ம பாப்பாபட்டி ராமசாமி இடைநில்லாப் பேருந்தில் ஏறி ஒரு நகரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்தில் ஏறி ஒரு கிராமத்தைத் தாண்டி ஒற்றையடிப்பாதைச் செல்லும் இடத்தில் இறங்கினார். அந்த இடத்திற்குப் பெயர் ‘கற்பூரச் சாமியார் விலக்கு.’ (பேர் ஃபேமஸ் ஆயிடுச்சில்ல. பேரு வச்சிர மாட்டோமா என்ன!)

ஓற்றையடிப்பாதை சாமியாரிடம் குறிகேட்க வந்த கேணையர்களால் (தன்னை நாடி வருபவர்களுக்கு சாமியார்கள் வைக்கும் பெயர் இப்படித்தான்) கார்செல்லும் பாதையாக மாறியிருந்தது.

சாமியாரின் வாசஸ்தலம் அருகே ஒரு கடை இருக்கும். அங்கே சாமியாரைச் சந்திக்க வருபவர்களின் நலன் கருதி டீயிலிருந்து டிபன் வரை விற்கப்படும். இருபது ரூபாயக்கு கற்பூரம் வாங்கிக் கொண்டு சென்றால்தான் சாமியாரைச் சந்திக்க முடியும். (அந்தக் கற்பூரம் மீண்டும் கடைக்கே வந்து சேர்ந்துவிடும் என்ற ரகசியம் கடைக்கார வெள்ளச்சாமிக்கும் கற்பூரசாமியாருக்கும் உள்ள ஜென்டில்மேன் அக்ரிமென்ட்)

சாமியாரை என்ன அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியுமா! காத்திருந்து காத்திருந்து காலமும் நேரமும்தான் போய்க் கொண்டிருக்கும். சாமியார் அடையாளம் சொல்லி அழைக்கப் படுபவர்கள்தான் அவரைச் சந்திக்க முடியும்.

மற்றவர்களெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்று சாமியாரிடமிருந்து அழைப்பு வரும்வரைக் காத்திருக்க வேண்டும். சரி காத்திருந்து காத்திருந்து நாவரண்டு விட்டது என்று டீ சாப்பிட கடைக்குச் சென்றால் அங்கே சாமியாரின் கையாள் கடைக்கார வெள்ளச்சாமி டீயைக் கொடுத்து பணத்தையும், வாயைக் கொடுத்து மனதிருப்தையும் வாங்கி விடுவான்.

அவனருகில் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைத்தடிகள் விஷயத்தைச் சேகரித்து, சாமியாரிடம் சரியாகச் சேர்த்து விடுவார்கள். குறிகேட்க வந்திருக்கும் கூட்டத்தில் அமர்ந்த்திருக்கும் நம்ம ராமசாமி ‘சாமியார் நம்மளைக் கூப்பிட மாட்டாரா’ என்று ஆவலோடு காத்திருக்கும் நேரத்தில் ஒருவன் உள்ளேயிருந்து வந்து

“இங்கே பச்சைச் சட்டை போட்டவன், தென்கிழக்குத் திசையிலிருந்து மகளின் கல்யாணக் காரியமாக வந்திருப்பவன் யார்.” என்று கேட்டவுடன் ராமசாமிக்கு இதயமெல்லாம் பளிச் பளிச்சென்று சீரியல் பல்புகள் கலர் கலராக எரிய ஆரம்பித்துவிடும்..

'ஆகா என்ன அற்புதம்! எவ்வளது லெக்கா (கிராமத்தில் அடையாளம் காணுதல் என்பதற்கு பேச்சு வழக்காக லெக்கு என்று சொல்வார்கள்.) சொல்லி கூப்பிடுறாரு!’ என்று பூரித்தப் போய் சாமியாரைக் காணச் செல்வார். (இப்படிப்பட்ட பூரிப்பான மனநிலையில்தான் பலர் தனது சொத்து, நகை, பணம் என்று சாமியார்களுக்குத் தாரை வார்த்துவிட்டு பின்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கிறார்கள்.)

இந்த ராமசாமி மூலமாக கற்புரச் சாமியாரின் புகழ் பாப்பாபட்டி மட்டமல்ல அதைச் சுற்றியுள்ள பத்துப் பட்டிக்கும் றெக்கை கட்டி பறந்து விடும். அப்புறம் என்ன! எண்பது கிலோ உடம்பில் ஐம்பது கிலோ தொப்பையைச் சுமந்து கொண்டு நம்ம காவல்துறை வீரர்கள் சாமியாரைத் தேடி வந்து பிடிக்கும் வரை அவர் காட்டில் பொன்மழையும் பெண்மழையும் மாதம் முப்பது மாரியாய்ப் பொழிந்து பொண்டிருக்கும்.

இந்தக் கற்பூரச் சாமியார் செய்யும் உத்திகளைத்தான் பெரும்பாலான சாமியார்கள் கையாண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படிப் பட்ட சாமியார்கள் எல்லாம் தொலைக்காட்சி நடிகர்கள்போல் என்றால் பெரிய திரை நடிகர்கள்போல் நாட்டையே ஏமாற்றும் சாமியார்களும் இருக்கிறார்கள்.
கடவுளை அமர்த்த வேண்டிய இடத்தில் இவர்கள் அமர்ந்து கொண்டு ‘தாங்கள் கடவுளின் அவதாரம்’ என்கிறார்கள். இதை நம்பியவர்கள் அவர்களுக்குப் பாதபூஜை செய்து பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி சாமரம் வீசி லாலி பாடுகிறார்கள். கேட்டால் இது கடவுளுக்குச் செய்யும் சேவை என்கிறார்கள்.

இந்தக் கடவுளின் அவதாரங்களுக்கு சுனாமிகளையும் சூறாவளிகளையும் ஏன் முன்பே கண்டு சொல்ல முடியவில்லை. இல்லை ஏன் நிறுத்த முடியவில்லை! இவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியுமா? இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூகவிரோதிகள் என்ற தீவிரவாதிகள் போன்றவர்கள்தான்.

(மீண்டும் மேலே சொன்ன கவுண்டமணி டயலாக்கை இந்த இடத்தில் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.)

நான்கு செருப்புத் தேய நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சிபீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் கூட இதுபோன்றவர்களிடம் ஆசிபெற்று அரசியல் நடத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளைவிட இதுபோன்ற சாமியார்களின் பாதங்களுக்குச் செய்யும் சேவைகள் அதிகம்.

அரசியல் வாதிகளிடம் மூடநம்பிக்கை அதிகம் என்பதை சமீபத்தில் கர்நாடக முதல்வராக மிகவும் குறுகிய காலம் மட்டும் பதிவியிலிருந்த மனிதர் விட்ட அறிக்கை உணர்த்தும். (இவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ஏவல் வைக்கப் பட்டதாம்)

என்ன கொடுமை சார் இது!! இன்னொரு வீரப்பன் வந்து இவர்களைப் போன்றவர்களைக் கடத்திக் கொண்டு போனால்தான் இவர்களிடமிருந்து மக்கள் தப்பிக்க வழி கிடைக்கும்.

உழைத்துக் கிடைக்கும் பலனைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பாhக்கிறார்கள் மனிதர்கள். அதனால்தான் இந்த ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எஃப் எம் வானொலிபோல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மாறுமா சமுதாயம்? மாறாது ஆசையில்லா மனிதர்களாக அனைவரும் மாறும்வரை!!!!!. மனிதர்களே மனிதர்களை ஏமாற்றாதீர்கள்.
மரணத்திற்குப் பின்பு நீங்களும் தெய்வமாகலாம்.

கனிஷ்கா. தென்காசி.

1 comment:

வேகநரி said...

மூடநம்பிக்கைக்கு எதிரான சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
இங்கே பார்த்தீனியம் செடிபோல் என்று நீங்கள் குறிப்பிட்டதால் சொல்கிறேன் எங்கள் சமுதாயத்தில் முஸ்லிம்கள் மிக மோசமான மூடநம்பிக்கையில் வாழ்கிறார்கள். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகிய அவர்களிடமும் கவனம் எடுக்க வேண்டும்.